ஸ்ரீபைரவநாதர்-பிரான்மலை

பிரான்மலை



நு என்று ஒருவன். தொடக்கத்தில் நல்லவ னாகத்தான் இருந்தான். பிரம்மாவையும் சிவபெருமானையும் எண்ணி, தவங்கள் பல செய்தான். அதன் பலனாக பலம் பெற்று அந்தகாசுரன் என்று பெயர் பெற்றான். அவ்வளவுதான்... அட்டகாசத்தை ஆரம்பித்து விட்டான். ஆணவத்தில் அனைவரையும் படாதபாடுபடுத்தினான். எந்த அளவுக்குக் கொடுமை தெரியுமா?

தேவர்களைச் சீலை கட்ட வைத்தான்; பூச்சூடவும் மையிடவும் செய்தான்; தனக்குச் சாமரம் வீசப் பண்ணினான். இவனது கொடுமை தாங்காமல், தேவர்களும் முனிகளும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

ஸ்ரீபைரவரை, அந்தகாசுரனுடன் சண்டையிடப் பணித்தார் சிவனார். போர் நடந்தது. அந்தகாசுரன் இருந்த இடம் தெரியாமல் அழிந்தான். கொடுமைகளில் இருந்து காப்பாற்றப்பட்ட தேவர்கள், தமது நன்றிக் கடனைத் தெரிவிக்க, ஆளுக்கு ஒரு ஆயுதத்தையோ திறனையோ, பைரவருக்குக் கொடுத்தனர்.


கருணைப் பார்வை பார்த்த சிவனார், மெள்ளக் குனிந்து தமது நெஞ்சையே நோக்கினார். முன்னரே, தாருகாவனத்தை எரித்திருந்தார் அல்லவா! அந்த நெருப்பு... அதுதான் காலாக்னி, சிவனாரின் நெஞ்சில் குடிகொண்டிருந்தது. சிறிய பொறியாக அங்கு அடைக்கலம் கண்டிருந்தது. அண்ணல் இப்போது நோக்க... பார்வையைப் புரிந்து கொண்ட காலாக்னி, கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அந்தக் கொழுந்து நெருப்பிலிருந்து வடிவாகி ஓங்கி நின்ற ஸ்வரூபமே, ஸ்ரீபைரவநாதர்.

'சர்வ ஆற்றல்களையும் தமக்குள் ஒடுக்கிக் கொண்டு, பிரபஞ்சம் முழுவதையும் தமக்குள் ஆக்கிக் கொண்டவர் ஸ்ரீபைரவர்' என்று சிவ சூத்திரங்கள் குறிப்பிடுகின்றன. சக்திகளைத் தம்மிடத்தில் கொண்டிருந்தாலும், அந்தந்தத் தருணத்துக்கு ஏற்ப, அஷ்ட சக்திகளில் ஒருவரைத் தம் துணையாகக் கொண்டு, எட்டு விதமான வாகனங்களோடும், எட்டு விதமான தன்மைகளோடும் பைரவர் விளங்கும்போது, அந்தந்தத் தன்மைக்கேற்ப பெயர் கொடுக்கப்பட்டு, அஷ்ட பைரவராக வணங்கப்படுகிறார்.



பைரவரைப் பற்றி இன்னும் சில சுவையான தகவல்களும் உண்டு. ஒரு முறை பிரம்மாவும் திருமாலும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தானே படைப்புக் கடவுள் என்ற ஆணவம் மேலோங்க, பிரம்மா, பேச்சுவாக்கில் திருமாலைப் பெரிதும் அவமதித்தார்; தம்மையே வணங்கும்படி பணித்தார். திருமால் செய்வதறியாது தவிக்க, இவற்றையெல்லாம் இன்னொரு பக்கமிருந்து கேட்டுக்கொண்டிருந்த சிவனார், ஆத்திரம் கொண் டார். பிரம்மாவின் ஆணவத்தை அடக்க 'பைரவர்' என்னும் தமது அம்சத்தை அனுப்ப, அதுவரை ஐந்து தலைகள் கொண்டிருந்த பிரம்மாவின் மேல் தலையை பைரவ மூர்த்தம் கிள்ளியது. தலை போக, பிரம்மாவின் ஆணவமும் அடங்கியது.

மேற்கூறியபடி சில கதைகள் விளங்க, இன்னும் சில கதைகள், பைரவரை, தக்ஷ யாகத்தோடு தொடர்பு படுத்துகின்றன. தட்சன் யாகம் செய்தான்; சிவனாரை அழைக்காமல் விட்டான்; அவன் மகளான தாட்சாயினி, கணவர் சொன்னதையும் கேட்காமல், தந்தையின் யாகத்துக்குச் சென்றாள்; அவமானப்பட்டாள். தட்சன் மகள் என்னும் நிலையே தேவையில்லை என்று நெருப்பில் தம்மையே ஆகுதியாக்கிக் கொண்டாள். பாதி எரிந்து கொண்டிருந்த அந்த உடலை அப்படியே எடுத்துத் தம் தோள் மீது போட்டுக் கொண்டு, சினத்துடன் அலைந்தார் சிவனார். அவருக்கு சாந்தம் ஏற்படுத்த விரும்பிய திருமால், சிவனுக்குத் தெரியாமல், அவர் பின்னாலேயே சென்று, சக்கராயுதத்தைக் கொண்டு, தன் சகோ தரியின் (பார்வதி அவரது சகோதரிதாமே) உடலைத் துண்டாக்கினார். அம்மையின் உடல் துண்டங்களும் அவரது உடை ஆபரணங்களும் விழுந்த இடங்களே, 'சக்தி பீடங்கள்' என்றாயின. சக்தி பீடங்களில், தமது அம்சமான பைரவரைக் காவல் தெய்வமாகச் சிவனார் நிறுவினார்.



வடமொழியில் பைரவர் என்றும், தமிழில் வைரவர் என்றும், வட மாநிலங்களில் பைரோன், பைரத்யா என்றும், நேபாளத்தில் பைராய் என்றும் வழங்கப்படுகிறபைரவர், சிவனாரின் உக்கிர மூர்த்தமாவார். அஷ்ட சக்திகளுடனும், எட்டுவித தன்மைகளுடனும் கூடிய அஷ்ட பைரவர்களிலிருந்து ரூப பேதங்கள் (வடிவங்கள்) பிரிந்து, 64 யோகினிகளுடன் கூடிய அஷ்டாஷ்ட (அதாவதுஎட்டு எட்டு... அறுபத்துநான்கு) பைரவர்கள் என்றும் சில சாத்திரங்களில் வணங்கப்படுவதுண்டு.

தன்மைக்குத் தக்கவாறு, சாத்விக, ராஜஸிக அல்லது தாமஸிகதாரியாகவோ, இரண்டு, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடனோ இவர் காட்சி தருவதுண்டு. சிவனாரின் அஷ்டாஷ்ட வடிவங் களைப் பற்றிக் கூறுகிற 'சிவப்பராக்கிரமம்' எனும் நூல், சிவபெருமானின் 64 வடிவங்களில், பைரவ மூர்த்தம் ஒன்று என விவரிக்கிறது. இதன்படி, இரண்யாட்சதனின் மகனான அந்தகாசுரனை வென்ற மூர்த்தம் என்பதால் பைரவருக்கு, 'அந்தஹாரி' என்பது சிறப்புப் பெயர்.



அசிதாங்க பைரவராக- அன்னம், குரோதன பைரவராக- கருடன், ருரு பைரவராக- ரிஷபம், உன்மத்த பைரவராக- குதிரை, சண்ட பைரவராக- மயில், கபால பைரவராக- யானை, பீஷண பைரவ ராக- சிங்கம் ஆகியவற்றை வாகனங்களாகக் கொண்டவருக்கு, கால பைரவர், சம்ஹார பைரவர் போன்ற நிலைகளில் நாய் வாகனம். அந்தஹாரிக் கும் நாய் வாகனமே. சொல்லப்போனால்... சிவ அம்சம், பைரவரான போது, வேதங்களே நாய் வடிவம் பெற்றன. எனவே, பைரவர் என்றாலே நாயைக் குறிப்பதாக எண்ணுவதுண்டு.


நாய் வாகனம் கொண்டு, காதுகளில் குண்டலங் களாகவும் கைகளில் வளையணியாகவும் கால்களில் சதங்கைகளாகவும் பாம்புகளை ஆபரணங்களாக அணிந்து, பாசம், அங்குசம், திரிசூலம், இடி, கபாலம், உடுக்கை என்று வெவ்வேறு விதமான ஆயுதங்கள் ஏந்தி, சிவன் கோயில்கள் பலவற்றில், தனிச் சந்நிதியில் கால பைரவர் காட்சி கொடுப்பார். அநேகமாக, சிவன் கோயில்களின் உள் பிராகார வடக்குச் சுற்றில் அல்லது வடகிழக்கு மூலையில், கால பைரவர் சந்நிதி இருக்கும்.

துன்பங்களையும் நோய்களை யும் வினையையும் தீர்க்கும் ஸ்ரீபைரவரை வழிபட, தமிழகத்தில் பல தலங்கள் உண்டு. அவற்றுள் சிறப்பு மிக்க ஒரு தலத்தில்... பூமியில் சிவ--பார்வதி எழுந்தருளியிருக்க, சொர்க்கத்தில் மங்கைபாகர் எழுந்தருளி திருமணக் காட்சி தர, அந்தரத்தில் பைரவர் அருள்கிறார்!


ஒரே நேரத்தில் சிவனாரின் அருள் தலமாகவும், அம்மை- ஐயன் திருமணத் தலமாகவும், தேவர்கள் கூடிய பேரூராகவும், குன்றாடும் குமரனின் சிறப்புத் தலமாகவும், கோயில் கட்டுமானப் பெருமைக்கான குடைவரைத் தலமாகவும், அமர்ந்த நவக்கிரகங்களைக் கொண்ட அற்புதத் தலமாகவும், பெயரில்லா மரமே தலமரமான விநோதத் தலமாகவும், குன்றக்குடி (திருவண்ணாமலை) ஆதீனத்தின் ஐந்து கோயில் தேவஸ்த்தான ஆளுகைக்கு உட்பட்ட அழகுத் தலமாகவும், பைரவப் பெருமானின் பெருமிதத் தலமாகவும் திகழ்கிற திருத்தலம் செல்வோமா?


பிரான்மலை! இலக்கியத்தில் 'திருக்கொடுங் குன்றம்' என்று வழங்கப்படும் இந்த திருத்தலத்துக்கு, இப்போது பிரான்மலை என்று பெயர். திண்டுக்கல் சிங்கம்புணரிக்கு அருகே உள்ளது இந்தத் தலம். திண்டுக்கல்- கொட்டாம்பட்டு- சிங்கம்புணரி வழியாக பிரான்மலை செல்லலாம். அதுபோல்...திருச்சி -கொட்டாம்பட்டு- பிரான்மலை; திருப் புத்தூர் (ராமநாதபுரம்)- சிங்கம்புணரி- பிரான்மலை; மதுரை- மேலூர்- சிங்கம்புணரி- பிரான்மலை; பொன்னமராவதி - பிரான்மலை என்று இந்தத் தலத்துக்குச் செல்லலாம்.


மதுரையிலிருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்துகள், பிரான்மலை வழியாகச் செல்கின்றன. மதுரையிலிருந்து சுமார் 80 கி.மீ, திருப்புத்தூரிலிருந்து சுமார் 24 கி.மீ, சிவகங்கையிலிருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்.

பாரிவள்ளல் வாழ்ந்த பறம்பு மலை இதுதான் என்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஏதுமில்லை! ஆனால் கோயில் வளாகத்துக்குள், முல்லைக்குத் தேர் தந்த பாரியின் செயலை நினைவுகூரும் வகை யில் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திருக் கோயில் பெரு விழாவில், ஒரு நாள் பாரி விழா நடைபெறும்.


ஊரை அடைந்து, திருக்கோயிலுக்குச் செல்கி றோம். கோயில் முகப்பு வரை வாகனத்தில் செல்லலாம். வலப் பக்கத்தில் குளம்; 'அடையாளஞ்சான் குளம்' என்கிறார்கள். எதிரில் பெரிய மண்டபம். இந்த மண்டபத்தில் நுழைந்து இடப் பக்கம் திரும்பினால், கோயிலின் தெற்கு வாயில். அதன் வழி யாகக் கோயிலுக்குச் செல்ல வேண்டும். தெற்கு வாயிலில் நுழைந்தால், நீண்ட பிராகாரம் போல் ஓர் அமைப்பு. இடப் பக்கம் திரும்பி நடந்தால், கோயிலுக்குச் செல்லலாம்; திரும்பாமல், எதிரில் தெரியும் படிகளில் ஏறினால், பைரவர் சந்நிதிக்குச் செல்லும் வழி என்று போட்டிருக்கிறது. வலப் பக்கம் திரும்பி சில அடிகளே நடந்தால், பெரிய குளம் ஒன்று மலைச் சரிவில் தெரிகிறது. திருக்கோயில் தீர்த்தமான இதுவே, 'தேனாழி தீர்த்தம்'.


பூமி, அந்தரம், சொர்க்கம் என்று மூன்று நிலைகளில் உள்ள கோயில் இது! தெற்கு நுழை வாயிலின் இடப் பக்கம் திரும்பி, முதலில் நாம் செல்லப்போவது மலையடிவார 'பூமி' கோயில்.

வானில்பொலி (வு)எய்தும் மழை மேகம்கிழித்து ஓடிக் கூனல்பிறை சேரும்குளிர் சாரல் கொடுங்குன்றம் ஆனில்பொலி ஐந்தும் அமர்ந்து ஆடிஉலகு ஏத்தத் தேனில்பொலி மொழியாளடு மேயான் திருநகரே

_ என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடிக் களிக்கும் தலத்துக்கு உரியது, இந்த மலையடிவாரக் கோயிலேயாகும்.



வாயிலில் இடப் பக்கம் திரும்பி நடக்கத் தொடங் கினோம் இல்லையா, அப்படியே நடந்தால், கோயிலின் தெற்குப் பிராகாரத்தோடு சேர்ந்து விடுவோம். வழியில் திரும்பி, மூலவர் சந்நிதிக்குச் செல்ல முடியும் என்றாலும், திருச்சுற்று வலம் வந்து சுவாமியை வணங்குவதுதானே நம்முடைய தேவார வழக்கம். அதன்படியே செல்லலாம், வாருங்கள்.


பிராகாரத் தெற்குச் சுற்றில், அறுபத்துமூவர். தென் மேற்கு மூலையில் முக்குறுணி விநாயகர். மேற்குச் சுற்றில் அடுத்து அம்மையப்பர்; தொடர்ந்து விஸ்வநாதர் - விசாலாட்சி. பின்னர், சொக்கநாதரும் மீனாட்சியும். அடுத்ததாகத் தொடர்ந்தால், திருக் கல்யாண மண்டபமும், அப்படியே அம்மன் கோயி லுக்குச் செல்லும் வழியும் உள்ளன. வலம் சுற்றிக் கொடுங்குன்றீசரை வணங்கலாம் வாருங்கள். வடக்குச் சுற்றில் வாகனங்கள். வலம் வந்து கிழக்குச் சுற்றை அடைகிறோம். கொடிமரம், பலிபீடம், நந்தி. மூலவர் சந்நிதி முகப்பில் விநாயகரையும் முருகரை யும் வணங்கி நிற்கிறோம்.

முகப்பு வாயிலில் பெரிய, அழகான விளக்குத் திருவாசி. மகாமண்டபம் நுழைந்து, மூலவரை நோக்கியபடியே நிற்கிறோம். சிறிய லிங்க மூர்த்தம். வட்ட வடிவ ஆவுடையார். இவர்தாம் கொடுங் குன்றீசர், கொடுங்குன்றநாதர், கடோரகிரீஸ்வரர், பிரச்சந்திரகிரீஸ்வரர், குன்றாண்ட நாயனார், கொடுங்குன்றம் உடைய நாயனார். மகோதர மகரிஷியும் நாகராஜனும் வழிபட்ட நாதர். உள்ளம் எல்லாம்உருகிக் குளிர, உணர்வெல்லாம் ஒளிர, வணங்கி நிற்கிறோம். நற்றவரும் கற்ற நவ சித்தரும் வாழ்த்தி உற்ற கொடுங் குன்றத்து என் ஊதியமே என்று ராமலிங்க வள்ளல் பெருமான் பாடிப் பரவியது நினைவில் தோன்ற, அதனை எண்ணியபடியே வழிபடுகிறோம்.


மகோதர மகரிஷி ராமாயண காலத்தைச் சேர்ந் தவர் என்கின்றன புராணங்கள். ராமாயணத்தில் வரும் தண்டகாரண்ய- ஜனஸ்தானப் பகுதியில் வசித்த இவர், தலங்கள் பலவற்றுக்கும் சென்று வழி பட்டு, நிறைவாக இங்கு வந்து வணங்கினாராம். அதெல்லாம் சரி! அதென்ன கடோரகிரீஸ்வரர் என்று திருநாமம்? கொடுங்குன்றம் என்பதுகூட என்ன?



முதலில் புரியாது! ஆனால், பூமி கோயிலை விட்டு மலைமீது இருக்கும் கோயிலுக்குப் போவதற்காக மலை ஏறும்போது தெரியும். இப்போது படிக்கட்டுகள் உள்ளன; குறுக்கு வழியில், கோயில் அர்ச்சகர் காட்டும் வழியில் ஏறினால்கூட கடினமாக இல்லை. ஆனால், வெளியே வந்து மலையை அண்ணாந்து பார்த்தால், மலையின், கரடுமுரடும் செங்குத்துத் தன்மையையும் புலப்படுகின்றன. அப்படியானால், அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கும்?



'கடோரம்' எனும் வடமொழிச் சொல்லுக்கு கடினம் என்று பொருள். கடினமான மலை கடோரகிரி அல்லது கொடுங்குன்றம். பிரச்சந்திர கிரி என்றும் ஒரு பெயர். பிரசண்ட கிரி என்றுஇருந் திருக்க வேண்டும். பிரசண்டம் என்றாலும் கடினம். அதுவே காலப் போக்கில் பிரச்சந்திர கிரி என்று மாறிவிட்டது போலும்! பரவாயில்லை, பிரகாசமான இறைவருக்கு இதுவும் பொருத்தம் தான்!

'கடினமான' பெயராக இருக்கிறதே என்கிறீர்களா? கடினம் போலத் தோன்றினாலும், ஈடுபாடும் முயற்சியும் இருந்தால் மலை மீது ஏறிவிடுகிறோம் அல்லவா! அப்படித்தான் இறைவனும். கடினம் போல் தோன்றினாலும் பக்தியும் பிரயத்தனமும் இருந்தால் அவரைப் பற்றி விடலாமே! அதனால் தான், கடோரகிரி, பிரான்மலை (பெருமானுடைய, பிரானுடைய மலை) ஆகிவிட்டது; கொடுங்குன்ற நாதர், குன்று ஆண்ட நாயனார் ஆகி விட்டார்.



பிரான்மலை என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் இறுதியில் இருக்கும் உயரமான குன்றுகளில் ஒன்று. சுமார் 2,000 மீட்டர் உயரம் கொண்ட இதன் மீது முன்னர் கோட்டை இருந்ததற்கான சிதிலங்கள் உள்ளன. இந்த மலையைப் பற்றிய புராணக் கதைகளும் சரி, வரலாற்றுத் தகவல்களும் சரி, சுவாரஸ்யமானவை.



சிவபுராணத்தின்படி, இது, மேரு மலையின் ஒரு பகுதி. ஆதிசேஷனுக்கும் வாயுக்கும் போட்டிவந்து, ஆதிசேஷன் மேருவை அழுத்திக் கொள்ள... வாயு, பலம் கொண்ட மட்டும் வீசித் தள்ளிய கதை நினைவிருக்கிறதா? அவ்வாறு வாயுதேவன் வீசிய போது, மேருவிலிருந்து பிய்ந்து வந்த துண்டங்களே காளத்தி மலையாகவும், திருச்செங்கோட்டு மலையாகவும் உள்ளன என்று ஆங்காங்கேபார்த் திருக்கிறோம். அத்தகைய துண்டங் களில் ஒன்றுதான், பிரான் மலையாக இருக்கிறதாம்!



வெகு தூரத்திலிருந்தும் உயரத்தில் இருந்தும் இதைப் பார்த்தால், இந்த மலையே சிவலிங்க வடிவத்தில் இருப்பது தெரியும். அதனால்தான், பிரான்மலை.



இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்திலும், இந்த மலை முக்கியத்துவம் பெற்றது. 17-ஆம் நூற்றாண்டில், ராமநாதபுர மன்னராக இருந்தவர் ரகுநாத சேதுபதி என்கிற கிழவன் சேதுபதி. சிவகங்கை பகுதியில் இருந்த நாலு கோட்டை பெரிய உடையாத்தேவரைப் பற்றிக் கேள்விப் பட்ட கிழவன் சேதுபதி, படை ஒன்றை நிர்வகிப்பதற்கான அளவு நிலங்களைத் தேவருக்கு வழங்கினார்.



கிழவன் சேதுபதியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த விஜய ரகுநாத சேதுபதி, பெரிய உடையாத் தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்குத் தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரைத் திருமணம் செய்து கொடுத்து பிரான்மலை, திருப்புத்தூர், சோழபுரம், திருப்புவனம் ஆகிய கோட்டைகளின் பொறுப்பையும் கொடுத்தார். பின்னர், ராஜா முத்து விஜயரகுநாத பெரிய உடையாத் தேவர் என்ற பெயரில் சிவகங்கையின் முதல் அரசரானார் சசிவர்ணத் தேவர். இவரின் மகனான முத்து வடுகநாதருடைய காலத்திலும், அவர் மனைவியான வேலு நாச்சியார் காலத்திலும் விடுதலைப் போர்கள் கிளர்ந்தன.

வேலு நாச்சியார் காலத்தில் தான், மருது சகோதரர்கள் ஆளுகைஏற்றனர். வீரபாண்டிய கட்ட பொம்முவின் சகோதரரான ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத் தனர் என்பதே, மருது சகோதரர்கள் மீது ஆங்கிலேயர்கள் கொண்ட முதன்மை வெஞ்சினம்.



மலையின்மீது, வாலியுல்லா ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் தர்கா உள்ளது.

ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்த இடம் என்று பிரான்மலை பெருமை கொள்கிறது. அப்போதைய காலத்தில், கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து பாக் ஜலசந்தி வரை நீண்டு கிடந்த அடர்ந்த காடுகளில், பிரான்மலையும் அடங்கியிருந்தது. மலை மீது, 'ஊமையன் குடம்பு' என்று ஒரு குகை உண்டு. குடம்பு என்பது ஆழமான குகை என்று பொருள்படும். இந்தக் குகைதான் ஊமைத்துரை ஒளிந்திருந்த இடம் என்கிறார்கள். குகையின்மீது, ஊமையன் இருக்கை என்று ஒரு பெரிய வட்டப்பாறை. அதிலிருந்து கீழே இறங்குவதாக இருந் தால், பிரான்மலையின் செங்குத்துச் சரிவில்தான் இறங்க வேண்டும். அருகில், காசிசுனை என்று தெள்ளத் தெளிந்த நீரூற்று. எங்கு வற்றினாலும், இங்கு நீர் வற்றுவதே இல்லையாம். ஆனால், ஊற்றுக்கண் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை.



இப்போதும்கூட, மக்கள் பணியே மகேசன் பணி என்பதை மிகச் சிறப்பாக நிறுவிக் கொண்டிருக்கும் குன்றக்குடி (திருவண்ணாமலை) ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கோயிலாகத் திகழும் பிரான் மலை, வெகு நேர்த்தியாகப் பராமரிக்கப் படுகிறது.

படங்கள் மற்றும் தகவல் உதவி - திருமதி. பிரேமா ராமலிங்கம்



No comments

Powered by Blogger.