அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை (பகுதி -1)
திருச்சிற்றம்பலம்
தில்லை தரிசிக்க முத்தி உண்டாகும், காசியில் இறக்க முத்தி உண்டாகும் ,ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முத்தி உண்டாகும் என ஆன்றோர்கள் இத்தல பெருமையை விவரித்துள்ளனர் .அத்தகைய தொன்மை சிறப்பு வாய்ந்த தலம் பற்றி சற்று விரிவாக நாம் காண இருக்கிறோம். தலபெருமை,திருகோயிலின் அமைப்பு , வரலாறு, வழிபட்டோர் ,சிறப்பு,திருவிழாக்கள் ,மலை ,குகை, தீர்த்தங்கள், கிரிவல மகிமை ,கிரிவல பாதையில் உள்ள ஆஷ்ரமங்கள் என இயன்ற அளவு விபரங்களை இனி வரும் சில பதிவுகளில் தொடராக காணலாம்
தலப்பெருமை
திருமாலுக்கும் , பிரம்மாவுக்கும் அடிமுடி எட்டாத நிலையில் இறைவன் மலை உருவில் தோன்றியது ,ஆதலின் அண்ணாமலை என பெயர் பெற்றது. கெளரி நகரம் ,தேசு நகரம் ,ஞான நகரம்,தலோசுவரம் சிவலோகம்,சுத்த நகரம், சோணகிரி ,அருணகிரி,அருணை என பல பெயர்கள் இத்தலத்திற்கு உண்டு .
கோயில் அமைப்பு
திருவண்ணாமலையை ஆண்ட அரசர்களும் மற்ற அரசர்களும் இங்கு பல சிறப்பு பணிகளை செம்மையாக செய்து உள்ளனர். இத்தளம் 24 ஏக்கர் பரப்பில் ஆறு பிரகாரங்களுடன் ஒன்பது ராஜகோபுரங்களுடன் மலையடிவாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .கிழக்கில் உள்ள ராஜ கோபுரம் 11 நிலைகளுடன் 217 அடி உயரமும் கொண்டு தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாக உள்ளது. இது கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டது .அதாவது இறுதி பிரகாரத்தில் உள்ள கோபுரங்களும் மதில் சுவர் பணிகளும் அவர் காலத்தில் நிறைவு பெற்றன.
தெற்கு கோபுரம் திருமஞ்சன கோபுரம் என பெயர் பெற்றது.தினமும் காலையில் அபிஷேக தீர்த்தம் இவ் வாயில் முலம் வந்தமையால் இப்பெயர் பெற்றது.
மேற்கு கோபுரம் பேயகோபுரம் ஆகும் .இது மலையை நோக்கி உள்ளது இதன் தனி சிறப்பு.வடக்கு கோபுரம் அம்மணி அம்மாள் கோபுரம் ஆகும் சிவவழிபாடு மேற்கொண்டு சிவனடியாராக வாழ்ந்த அம்மணி அம்மாள் என்பவர் இக்கோபுரத்தை கட்டினார்.
(தொடரும்....)
Leave a Comment