அருள்மிகு ஸ்ரீமாசாணியம்மன் திருக்கோயில்,ஆனைமலை
இயற்கை எழில் மிகுந்த பொள்ளாச்சி கொங்கு மண்டலத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் கம்பீரமாக காட்சியளிப்பது ஆனைமலை.ஆணைமலையடுத்த சேத்துமடை சாலையில் அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் என்ற அழகிய தோரண வாயில் நம்மை வரவேற்கிறது .சற்று உள்ளே சென்றால் அருள்மிகு அன்னையின் எழிலார்ந்த மாளிகை . எங்கும் காண முடியாதபடி மயான தேவதையாக அம்மன் படுத்திருக்கும் கோலத்தில் காட்சி தருகின்றாள் .உப்பாற்றின் கரையில் சுமார் பதினேழு அடி நீளத்தில் அம்மன் திருவுருவம் அமைந்துள்ளது .மிகவும் தொன்மையும் சக்தியும் வாய்ந்த அம்மனின் திருவுருவம் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும் என்பது நிதர்சனம் .
பல சிறப்புகளை உடைய இந்த கோயிலில் உள்ள நீதிக்கல் விசேஷமானது.தங்களுக்கு ஏற்பட்ட அநீதியை அம்மனிடம் சொல்ல வருபவர்கள் கடையில் மிளகாய் வற்றல் வாங்கி அங்கிருக்கும் உரலில் ஆட்டி அருகில் நிற்கும் நீதிக்கல்லில் முழுவதுமாக தேய்த்து தாங்கள் பாதிக்கப்பட்ட விபரத்தை முறையிட்டால் தவறு செய்தவர்களை அம்மன் மூன்று அமாவாசைக்குள் தண்டித்து விடுவாள் .இந்த முறை வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத ஒன்று .கோரிக்கை நிவர்த்தியானதும் அம்மனை குளிர வைக்க தூய நல்லெண்ணெய் காப்பு செய்ய வேண்டும். இதை தவறாது செய்ய வேண்டும் .
மேலும் பில்லிசூன்யம் ,ஏவல் ஆகியவற்றால் துன்பபட்டு வருபவர்கள் மற்றும் சித்தம் பேதலித்தவர்கள் இங்கு வந்து வழிபட அம்மன் அருளால் அனைத்தும் குணமாகும் .
திருவிழா :
தை அமாவாசையன்று கொடியேற்ற பட்டு தொடர்ந்து 18 நாள் விழா நடைபெறுகிறது.விழா தொடங்கி 14 ஆம் நாள் மயானகரைக்கு ஊர்வலமாக சென்று பிணம் எரிக்கும் இடத்தில் மயான மணலில் பெரிய அளவில் 40 அடி நீளம் 20 அடி அகலம் உள்ள குழி வெட்டுவார்கள்.அதில் பூங்குழி குண்டம் வளர்க்கப்பட்டு 16 ஆம் நாள் பூக்குழி இறங்குவார்கள்.அன்றே அம்மன் அழகாக சித்தித் தேரில் ஊர் உலாவி வரும்.
விசேஷ நாட்கள் :
செவ்வாய் ,வெள்ளி, மாத அமாவாசை ,தீபாவளி,பொங்கல், ஆடிவெள்ளி வருட பிறப்பு, நவராத்திரி ஆகியன இங்கு விசேஷ நாட்கள் .
ஹரி ஓம் ஆதி மகாசக்தி ஸ்ரீமாசாணி அம்மனே சரணம் !
ஹரி ஓம் ஆதி மகாசக்தி ஸ்ரீமாசாணி அம்மனே சரணம் !
Leave a Comment